குளிர்சாதனங்களின் உதவியுடன் உறை நிலையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொதிகளின் மேற்பரப்புக்களின் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோவின் இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கடல் மீன்களின் வெளிப்புற கொதிகள் மீது உயிருள்ள கொரோனா வைரஸைக் கண்டறிந்து அகற்றியுள்ளதாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
சீனாவின் இந்தக் கருத்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கிங்டாவோ நகரில் பதப்படுத்தி உறைய வைக்கப்பட்டிருந்த உணவுப் பொதிகளின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிருடன் இருந்தது கண்டறியப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது. எனினும் இந்த உணவுப்பொருள் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன? என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இறக்குமதி உணவுப் பொதிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து துறைமுகப்பகுதியான கிங்டாவோ நகரத்தில் வாழும் சுமார் 1 கோடியே 10 இலட்சம் மக்களுக்கும் உடனடியாக கொரோனா தொற்று சோதனை நடத்தியுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் ஒரு கொள்கலனிலல் இறக்குமதி செய்யப்பட்ட இறாலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உறைநிலையில் பதப்படுத்தப்படும் இறால் இறக்குமதி சீனாவில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவலால் கொரோனா வைரஸ் பரவலில் உலக நாடுகளிடையிலான ஏற்றுமதி – இறக்குமதி வா்த்தகத்தின் பங்கு குறித்தான அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.